சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக இணையத்தில் பொய்ச் செய்தி வெளியிட்ட இளையருக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 2025 ஜூன் 7ஆம் தேதி, தைவான் செல்லவிருந்த ரைக்கஸ் டான் ஸி காய், 20, சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1ல் தாம் ஏறவிருந்த ஸ்கூட் விமானத்தைப் படம்பிடித்தார்.
நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, அந்தப் படத்தை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றி, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாகப் பொய் கூறினார். அதை அவர் ஒரு ‘நகைச்சுவை’யாகச் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. அப்பதிவைப் பார்த்த நண்பர் ஒருவர் இன்ஸ்டகிராமில் டானை தொடர்புகொண்டபோது, தாம் விமானத்தை வெற்றிகரமாக வெடிகுண்டு வைத்துத் தகர்த்துவிட்டதாக டான் பதிலளித்தார்.
அன்றிரவு 1 மணியளவில் மற்ற மூவருடன் டான் விமானத்தில் புறப்பட்டார். அதே நேரத்தில், டான் பதிவேற்றிய புகைப்படம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, சீனாவுக்கும் கிரீசுக்கும் செல்லவிருந்த மூன்று ஸ்கூட் விமானங்கள் தீவிரப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதனால் அந்த விமானங்கள் ஒரு மணி நேரத்திற்குமேல் தாமதமானதில் ஸ்கூட்டுக்குக் கிட்டத்தட்ட $2,000 இழப்பு ஏற்பட்டது. மூன்று நாள் கழித்து தைவானிலிருந்து திரும்பியதும் கைது செய்யப்பட்ட டான், நீதிமன்றத்தில் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஸ்கூட்டுக்கு அவர் முழுத் தொகையையும் இழப்பீடாக வழங்கினார். டானுக்குப் பிறப்பித்த நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவின்படி, அவர் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் 90 மணி நேரம் சமூகச் சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அவருடைய பெற்றோரிடமிருந்து $5,000 பிணைத் தொகையும் பெறப்பட்டது.



