சாங்கி சிட்டி பாய்ன்ட்டில் உள்ள “புரூஃபர் பேக்கரி அண்ட் பிஸ்ஸெரியா” கடையின் உரிமம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடையில் பூச்சிகளின் புழக்கத்தைத் தடுக்கத் தவறியதற்காக உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தீவு முழுதும் 15க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ள அது, ஓராண்டில் 12 குற்றப் புள்ளிகளைப் பெற்றதாகவும், அதன் கடைகள் பூச்சிகளின் புழக்கத்தைத் தடுக்க தவறியதற்காகச் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு $800 அபராதம் செலுத்தியதாகவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.
இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனைகளின்போது சாங்கி சிட்டி பாய்ன்ட்டில் உள்ள “புரூஃபர்’ கடையில் கரப்பான்பூச்சிகள் இருந்ததைக் கண்டதாக அந்த அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கூறியது.
தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட கடையில் உணவுகளைக் கையாண்டவர்களும், உணவுச் சுகாதார அதிகாரிகளும் மீண்டும் பணியில் சேர்வதற்கு முன்னர் ஊழியரணி திறன் தகுதி உணவுப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்புக்கு மீண்டும் செல்லவேண்டும் என்று அமைப்பின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

