எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்தார்.
தொகுதி எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய குடியிருப்பாளர்களைச் சந்திக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பொதுத் தேர்தலுக்குத் தயாராகத் தமது கட்சி அயராது உழைத்து வருவதாக திரு லியோங் தெரிவித்தார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கட்சியின் துணைத் தலைவர் ஹேசல் புவாவும் நானும் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம். இருவரும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் 700க்கும் அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளோம்,” என்றார் திரு லியோங்.
கடந்த பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் களமிறங்கிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக் குழுவில் திரு லியோங்கும் திருவாட்டி புவாவும் அங்கம் வகித்தனர்.
அத்தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, மக்கள் செயல் கட்சியிடம் நூலிழையில் தோல்வி அடைந்தது.
அதையடுத்து, திரு லியோங்கும் திருவாட்டி புவாவும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

