அலட்சியமாக அழகு பராமரிப்புச் சிகிச்சை வழங்கி ஒரு மாதின் மரணத்துக்கு காரணமாக இருந்த மருத்துவருக்கு அரசு வழக்கறிஞர் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று, சான் பிங்யீ என்ற 37 வயது மருத்துவர், தேவை இல்லாமல் ‘இடிடிஏ’ (EDTA) எனப்படும் ஒருவித அமிலத்தை நரம்பு வழியாக லாவ் லீ டிங் என்ற 31 வயது மாதின் நெற்றியில் செலுத்தினார்.
நெற்றியில் தோன்றிய கோடுகளை அகற்றும் சிகிச்சையில் இந்த விபரீதம் நடந்துள்ளது.
சொத்து முகவராகப் பணியாற்றிய மாதுக்கு, அதற்கு முன்பாக எவ்வித மருத்துவப் பிரச்சினைகளும் இருந்ததில்லை.
குறிப்பிட்ட சிலவகை நோய்களுக்குப் பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே இடிடிஏ போன்ற அவ்வகை அமிலம் நோயாளிகளுக்குச் செலுத்தப்படுவதாகவும் நீதிமன்றத்தில் விளக்கப்பட்டது.
அமிலம் செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஐந்து நாள்கள் கழித்து அவர் அங்கு மரணமடைந்தார்.
மருத்துவரை அந்த அமிலத்தை செலுத்தும்படி திருவாட்டி லாவ் கேட்டுக்கொண்டாலும் அதனால் பிரச்சினைகள் விளையக்கூடும் என்பதை சான் அறிந்திருந்தார் எனவும், அமிலத்தை நோயாளி கேட்டுக்கொண்டபடி வழங்கும் தகுதியை மருத்துவர் சான் பெற்றிருக்கவில்லை என்பதையும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.


