வெள்ளம், தீச்சம்பவம் போன்ற அவசரநிலையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைச் சிறுவர்களுக்குக் கற்பிக்கும் கதைப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
‘Ack! Furtropolis Is Under Attack’ எனும் தலைப்பிலான அக்கதைப்புத்தகத்துக்கு எஸ்ஜிசெக்யூர் ஏற்பாடு செய்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கப்பூரின் மீள்திறனை மேம்படுத்தும் சமூக அடிப்படையிலான திட்டங்களில் இதுவும் ஒன்று.
புதிய கதைப்புத்தகம் 37 பக்கங்களைக் கொண்டுள்ளது.
விலங்குகளைக் கதாமாந்தர்களாகக் கொண்டுள்ளது.
சிறுவர்களைக் கவரும் வண்ணம் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டிக் கேள்விகளும் அதில் அடங்கும்.
அதில் வரும் முன்னணி கதாமாந்தர் ஹேம்மி எனும் வெள்ளெலி ஆகும்.
ஒருநாள் அது தமது அக்கம்பக்கத்தில் வெடிகுண்டு தாக்குதலை நேரில் பார்க்கிறது.
அதன்பிறகு மற்ற விலங்குகள் எல்லாம் எவ்வாறு ஒன்றுக்கொன்று ஆதரவு வழங்குகின்றன என்பே கதையாகும்.
கதைப்புத்தகத்தை உள்துறை மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11), புளோக் 208B பொங்கோல் பிளேசில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் வெளியிட்டார்.
20 பாலர் பள்ளி மாணவர்களுக்கு அப்புத்தகம் வாசித்துக் காட்டப்பட்டது.


