இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) எழுதிய மாணவர்கள் வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெறலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு வாரியமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெறலாம்.
தேர்வு முடிவுகளைப் பள்ளிகளில் சென்று பெறமுடியாத மாணவர்கள், தங்களின் சார்பில் முடிவைப் பெற நவம்பர் 24க்குள் ஒருவரை நியமிக்கலாம்.
உயர்நிலைக் கல்விக்குத் தகுதிபெறும் மாணவர்கள் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான படிவங்கள் வழங்கப்படும்.
மாணவர்கள் படிவத்தில் காணப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பள்ளித் தெரிவுகளை, இணையம்வழி, நவம்பர் 22ஆம் தேதி காலை 11.30 மணி முதல் நவம்பர் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிவரை சமர்ப்பிக்கலாம்.
டிசம்பர் 20 முதல் 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பிவைக்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.