சிங்கப்பூருக்கு 1,787 யானை தந்தங்களை இறக்குமதி செய்த குற்றத்திற்காக நிறுவன இயக்குநர் ஒருவருக்கு 10 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அருகிவரும் உயிரினங்கள் (இறக்குமதி ஏற்றுமதி) சட்டத்தின்கீழ் 40 வயதான டாவ் தி ப்பொய் எனும் மாதுமீது குற்றம் நிரூபனமானது.
வியட்னாம் நாட்டைச் சேர்ந்த டாவ் சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவர் வர்த்தக நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக இருந்தபோது இக்குற்றத்தைச் செய்திருக்கிறார்.
3 மார்ச் 2018ஆம் ஆண்டில் பாசிர் பாஞ்சாங் சோதனைச் சாவடியில் 40 அடி கொள்கலன் சோதிக்கப்பட்டபோது தந்தங்கள் பிடிப்பட்டன. கொள்கலனில் நிலக்கடலை பொட்டலங்கள் இருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மொத்தம் 3,480 கிலோ கிராம் எடையுள்ள 1,787 தந்தங்கள் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டன.
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக டாவ்வின் வழக்கறிஞர் கூறினார்.

