ரமலான் மாதத்தை முன்னிட்டு பொருளியல் ரீதியாகத் தடுமாறும் 1,300க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்களுக்கு ஃபேர்பிரைஸ் குழுமம் அன்பளிப்புப் பைகளை வழங்குகிறது.
அதில் 40 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் இருக்கும். அன்பளிப்புப் பைகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) முதல் வழங்கப்படுகிறது.
அன்பளிப்புப் பையில் தானியம், சோயா பால், டப்பாவில் அடைக்கப்பட்ட டியூனா மீன், பேரீச்சம் பழம் உள்ளிட்டவை இருக்கும்.
நோன்பு இருக்கும் நபர்கள் ஆரோக்கியமான சத்துமிக்க உணவு சாப்பிட வேண்டும் என்பதைப் புரிந்து இந்த அன்பளிப்புப் பைகள் வழங்கப்படுகிறது.
மூன்று தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் ரமலான் மாதம் முழுவதும் அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகுதிபெறும் குடும்பங்கள் அவர்களது அன்பளிப்புப் பைகளை தீவு முழுதும் உள்ள மெண்டாக்கி சேவை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
திங்கட்கிழமை (மார்ச் 3) ஃபேர் பிரைஸ் குழுமம், மெண்டாக்கி ஆகியவற்றின் தொண்டூழியர்கள் கொண்டு கிட்டத்தட்ட 1,500 அன்பளிப்புப் பைகள் விநியோகத்திற்காகத் தயார் செய்யப்பட்டன.

