இலங்கைக் காடுகளில் மட்டும் காணப்படும் ஒருவகை சிறுத்தை இனங்களின் எண்ணிக்கை உலக விலங்கியல் தோட்டங்களில் 80 தான் உள்ளது.
‘ஸ்ரீலங்கன் லெபர்ட்ஸ்’ என்ற பெயருடன் அழைக்கப்படும் அவற்றில் இணைபிரியா ஜோடிச் சிறுத்தைகளை சிங்கப்பூர் வனவிலங்குக் குழுமம், மூன்று ஆண்டுகளாக பல நாடுகளில் தேடி கண்டங்களையும் கடந்து கண்டுபிடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வரவழைத்தது.
விலங்கியல் தோட்டத்தின் இனப்பெருக்க முயற்சிக்குப் பிறகு அந்த சிறுத்தை ஜோடியின் முதல் மூன்று குட்டிகள் இவ்வாண்டு ஜனவரி மாதம் பிறந்தன.
தாய் சிறுத்தையின் பெயர் யாலா, தந்தை சிறுத்தையின் பெயர் அசங்கா. பிறந்த குட்டிகளில் ஒரு பெண் சிறுத்தையும் இரு ஆண் சிறுத்தைகளும் அடங்கும். சிங்கப்பூரில் பிறந்துள்ள முதல் ‘ஸ்ரீலங்கன் லெபர்ட்ஸ்’ என்ற அரியவகை சிறுத்தைகள் இவைகளாகும்.
விலங்கியல் தோட்டத்தின் ‘வைல்ட் ஆப்பிரிக்கா’ என்ற காட்சிப் பிரிவில் காணப்படும் விலங்குகளில், புதிய சிறுத்தைக் குடும்பத்தை மே மாத முதல் இரு வாரங்கள் வரை தினசரி பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம். அதன் பிறகு புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே குட்டிகள் காட்சிக்கு விடப்படும்.
ஆரோக்கியமாக குட்டிகள் உள்ளன என்ற நற்செய்தியுடன் இந்த விவரங்களை மண்டாய் வனவிலங்குக் குழுமம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அறிவித்தது.
அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் (IUCN) அரியவகை விலங்கியல் இனத்தின் பட்டியலில் இந்தச் சிறுத்தைகளும் இடம்பெற்றுள்ளன. காடுகளில் அவற்றின் தற்போதைய எண்ணிக்கை ஏறத்தாழ 800 இருக்கும் என்று அமைப்பு கணித்துள்ளது.
சிங்கப்பூரில் கடைசியாக 30 ஆண்டுகளுக்கு முன் சிறுத்தைக் குட்டிகள் ‘நைட் சஃபாரி’ என்ற இரவு விலங்கியல் தோட்டப் பிரிவில் பிறந்தன.

