சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கமான சுவா சு காங் குரோவ்வில் அமைந்துள்ள ஐடிஇ காலேஜ் வெஸ்ட் பள்ளியில் செயல்படும் மாணவர் உணவு மையத்தில் கடந்த டிசம்பர் 1ல், எலி ஒன்று மேசை, நாற்காலிகளுக்கு கீழ், அங்கும் இங்குமாக ஓடியது. அது உடனே பிடிக்கப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டது.
அந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுவருகிறது.
சம்பவத்திற்குப் பிறகு, பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனம் வரவழைக்கப்பட்டு, உணவு மையமும் அங்குள்ள தனித்தனிக் கடைகளும் அருகில் உள்ள சுற்று வட்டாரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அங்கு எலிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பள்ளியின் பேச்சாளர் தி ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
“எங்களது கல்வி வளாகத்திலும் உணவு உண்ணும் மையங்களிலும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்த சம்பவம் மறுமுறை நடைபெறாது என்பதையும் உறுதிசெய்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
உணவுக் கடை உரிமையாளர்களுடனும், உணவு அருந்துவோருடனும் நெருக்கமாகச் செயல்பட்டு அனைவரும் சிறந்த அனுபவத்தைப் பெரும் வகையில் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூர் உணவு முகவையிடம் இருந்து எந்த விவரமும் இதுவரை வரவில்லை.

