வெஸ்ட் கோஸ்ட் உணவங்காடி நிலையத்தில் எலிகள் அதிக அளவில் அங்கும் இங்கும் திரிவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் வலைத்தளத்தைப் பயன்படுத்தும் ஜேசன் என்றவர் பதிவிட்ட அந்தக் காணொளியில், துப்புரவுப் பணியாளர் ஒருவர் தட்டுகளை வைக்கும் இடத்துக்கு அருகே எலி ஒன்று ஓடுவதும்,உணவங்காடிக்குள்ளே நாற்காலி, மேசைகளுக்கு இடையே எலிகள் புகுந்து செல்வதும் பதிவாகியுள்ளது.
மேலும் இரு எலிகள் சத்தமிட்டவாறு சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவு இணையவாசிகளிடையே உணவங்காடியின் சுகாதாரச் சீர்கேடு குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.
அந்த உணவங்காடியில் உணவருந்த பயமாக இருப்பதாக ஜேசன் கவலை தெரிவித்துள்ளார். உணவங்காடி எப்போதும் அசுத்தமாகவே இருப்பதாகப் பல இணையவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகப் புக்கிட் பாத்தோக் - ஜூரோங் வெஸ்ட் நகர மன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

