சமூக சேவைப் பணிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட வருமானம் சராசரியாக 5 விழுக்காடு உயர்ந்துள்ளதால், இத்துறையில் பணிபுரிபவர்கள் அதிகச் சம்பளம் பெறக்கூடும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும், தேசியச் சமூகச் சேவை மன்றமும் புதன்கிழமை (ஏப்ரல் 1) அண்மைய சம்பள அளவீடுகளை வெளியிட்டன.
அந்த அளவீடுகளின்படி, இத்துறையிலுள்ள சில பதவிகளுக்கு 15 விழுக்காடு வரையிலான அதிக வருமான உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 22,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள சமூக சேவைத் துறையில் வழங்கப்படும் சம்பளங்கள் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பள வழிகாட்டி நெறிமுறைகளை ஆண்டுதோறும் புதுப்பித்து வருவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
உதாரணமாக, உயர்நிலைப் பராமரிப்பு மூத்த பணியாளர்களுக்கான அண்மைய பரிந்துரைக்கப்பட்ட மாதச் சம்பளம் $4,470 ஆகும்.
இது, 2025 வழிகாட்டிமுறைகளில் அறிவிக்கப்பட்டிருந்த $3,890 சம்பளத்தை விட 15 விழுக்காடு அதிகமாகும்.
இது, தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யும், ஆனால் இன்னும் தங்களின் அதிகபட்ச சம்பள நிலையை எட்டாத பராமரிப்புப் பணியாளர்களின் வருமானம் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்புப் பணியாளர்களைப் பார்த்துகொள்ளும் வழிகாட்டிமுறைகள்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு அன்றாடப் பணிகளில் உதவுவதோடு, அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதையும் பராமரிப்புப் பணியாளர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
2026 ஆம் ஆண்டுக்கான சம்பள வழிகாட்டிமுறைகளின்படி, சமூகப் பணியாளர்கள், ஆலோசகர்களுக்கான தொடக்கச் சம்பளம் $3,970 ஆகும். இது 2025ம் ஆண்டில் இருந்த $3,850 சம்பளத்தை விட 3 விழுக்காடு அதிகம்.
நிலைய மேலாளர்களுக்கான தொடக்க ஊதியம் இந்த ஆண்டு $9,140 ஆகும். 2025ம் ஆண்டு இது $8,760 ஆக இருந்தது. ஒப்புநோக்க இது 4 விழுக்காடு அதிகம்.

