மறுசீரமைக்கப்பட்ட லிம் சூ காங் சாலை ஜூன் 8ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்குத் திறக்கப்பட இருக்கிறது.
மறுசீரமைக்கப்பட்ட சாலை 8 கிலோ மீட்டர் நீளமுடையது. தற்போதுள்ள சாலை அதே நேரத்தில் மூடப்படும்.
இந்தத் தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (மே 26) வெளியிட்டது.
மறுசீரமைக்கப்பட்ட சாலை இருவழிகளைக் கொண்டது. ஒவ்வொரு திசையிலும் மூன்று சாலைத் தடங்கள் உள்ளன.
புதிய சாலை ஜாலான் பாஹாரிலிருந்து தொடங்கி ஓல்டு சுவா சூ காங் சாலையுடனான சாலைச் சந்திப்பு வரை இருக்கும்.
அதன் பிறகு, இரண்டு சாலைத் தடங்களைக் கொண்ட சாலையாக அது மாறும். இச்சாலை போக்குவரத்துச் சமிக்ஞை உள்ள டி-சாலைச் சந்திப்பாக விரிவுபடுத்தப்படும்.
தெங்கா விமானப் படை முகாமின் விரிவாக்கத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக ஆணையம் கூறியது.
பாய லேபார் ஆகாயப் படை முகாம் 86 ஆண்டுகளாக இயங்கி வரும் தெங்கா ஆகாயப் படை முகாமிற்கு இடமாறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக சாலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 80,500 கல்லறைகள் அகற்றப்படும்.
அத்துடன், அப்பகுதியில் உள்ள ஆறு பண்ணைகள் பாதிப்படையும். புதிய சாலை திறக்கப்பட்டதும் சாலைகளில் இருபுறங்களிலும் நடைபாதைகள் இருக்கும்.
பாதசாரி இணைப்பை மேம்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட லிம் சூ காங் சாலையில் புதிதாக எட்டு பேருந்து நிறுத்தங்கள் சேர்க்கப்படும்.
ஜாலான் பாஹார், ஓல்டு சுவா சூ காங் சாலையில் உள்ள ஆறு பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்படும்.
பேருந்துச் சேவை 172, 405, 975 ஆகியவற்றின் பயணப் பாதைகள் மாற்றி அமைக்கப்படும்.