சிங்கப்பூரின் தேசிய அஞ்சல் நிறுவனமான சிங்போஸ்ட்டில் சீர்திருத்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பல முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர்.
குறைந்தது ஐந்து நிர்வாகிகள் பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் நான்கு பேர் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள்.
லீ எங் கியாட், செஹர் அஹமட், நோயல் சிங்கி, மிஷல் லீ ஆகியோர் சிங்போஸ்ட் இணையத் தளத்தின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் ஏப்ரம் 1ஆம் தேதி நிலவரப்படி இடம்பெறவில்லை.
அவர்கள், உத்திபூர்வ, தொடர்புத் துறையின் தலைவர், குழுமத்தின் தலைமை மக்கள் அதிகாரி, குழுமத்தின் தலைமை தகவல் அதிகாரி, நீடித்த நிலைத்தன்மை தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்கள்.
தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான ஆட்ரே டியோவும் பதவி விலகியுள்ளார்.
ஏறக்குறைய 45 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என சிங்போஸ்ட் கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்து. இதையடுத்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
பிஸ்னஸ் டைம்சிடம் பேசிய சிங்போஸ்ட் பேச்சாளர் ஒருவர், கடந்த பல மாதங்களாக நிர்வாகச் சீரமைப்பு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
“ஊழியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனிப்பட்டவர்களின் குறிப்பிட்ட விவரங்களை வெளியிட இயலாது, ஊழியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நிர்வாகத்தை வலுப்படுத்துவதே எங்களுடைய நோக்கம்,” என்று அந்தப் பேச்சாளர் மேலும் கூறினார்.