சாங்கி கடற்கரைப் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் வாழும் ஐந்து சிறுத்தைப் பூனைகள் (leopard cats) இவ்வாண்டு பிற்பாதியிலிருந்து இடம் மாற்றப்படவுள்ளன.
நகர மேம்பாட்டுப் பணிகளிலிருந்து அவற்றைப் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த இடமாற்றம், சிறுத்தைப் பூனைகளின் நலன், அவை நீண்டகாலம் வாழ்வது ஆகியவற்றை உறுதிசெய்யும் என்று தேசிய பூங்காக் கழகமும் அரசாங்க சார்பற்ற அமைப்பான சிங்கப்பூர் வனப்பூனை செயற்குழுவும் (ஸ்வேக்) புதன்கிழமை (ஜூன் 3) தெரிவித்தன.
சிறுத்தைப் பூனைகள் எங்கு இடம் மாற்றப்படும் என்பதை அந்த அமைப்புகள் தெரிவிக்கவில்லை.
உலகளவில் ஆக அதிகமாக பரவிவாழும் வனப்பூனை வகைகளில் சிறுத்தைப் பூனைகள் அடங்கும். ஆனால், சிங்கப்பூரில் அவை அழிந்துபோகும் அபாயத்தைப் பெரிதும் எதிர்நோக்கும் விலங்குகளாகும்.
50க்கும் குறைவான சிறுத்தைப் பூனைகளே சிங்கப்பூரில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தெக்கோங், உபின் தீவுகளிலும் மேற்குப் பகுதியில் உள்ள நீர் சேகரிப்புப் பகுதியிலும் வாழ்கின்றன.
சிறுத்தைப் பூனைகள் சாங்கியில் இருப்பது முதன்முதலில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரியவந்தது. அதற்கு முன்பு ஒரு சிறுத்தைப் பூனை சாலை விபத்தில் சிக்கி மாண்டது.

