அக்டோபர் மாதத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை முந்தைய மாதத்தைவிட 38.4 விழுக்காடு சரிந்து 1,347 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2020க்குப் பிறகு மிகக் குறைந்த மாதாந்தர அளவு.
சிங்கப்பூர் சொத்துச் சந்தை (SRX) மற்றும் 99.co ஆகியவற்றின் தரவுகளின்படி, அக்டோபர் 2024 உடன் ஒப்பிடும்போது, மறுவிற்பனை அளவு 37.6 விழுக்காடு குறைவாக இருந்தது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்திற்குப் பிறகு இதுவே மிகக் குறைந்த மாதாந்தர பரிவர்த்தனை அளவு. அப்போது கொவிட்-19 பெருந்தொற்று பரிவர்த்தனைகள் முறையே 423 மற்றும் 364 ஆகக் குறைந்தன.
இதற்கிடையே, மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.6 விழுக்காடு சரிந்தன.
பரிவர்த்தனை அளவுகளில் ஏற்பட்ட சரிவு குறிப்பிடத்தக்கது என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிடிஓ மற்றும் எஞ்சியுள்ள வீடுகளின் நிலையான விநியோகமே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறினர். இது வீடு வாங்குபவர்களை மறுவிற்பனை சந்தையிலிருந்து விலகியிருக்க வைத்திருக்கக்கூடும்.
இருப்பினும், ஒரு மாதத் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை விரைவில் எடுப்பது சரியாக இருக்காது என்றும் பகுப்பாய்வாளர்கள் சிலர் எச்சரித்தனர்.
அக்டோபரில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிடிஓ விற்பனையில், 9,144 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அவற்றில் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரங்களைக் கொண்ட 3,294 வீடுகளும் அடங்கும்.
அண்மைய பிடிஓ விற்பனையில், திருமண நிலையைப் பொருட்படுத்தாமல், பெற்றோரும் அவர்களது பிள்ளைகளும் ஒரே குடியிருப்புத் திட்டத்தில் இரண்டு வீடுகளுக்குக் கூட்டாக விண்ணப்பிக்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலையில், முதல் முறையாக ஒற்றை விண்ணப்பதாரர்கள், தங்கள் பெற்றோருக்கு அருகில் அல்லது அவர்களுடன் இரண்டு அறைகள் கொண்ட ஃபிளெக்ஸி வீட்டை வாங்கும்போது, ஒற்றையரான வீடு வாங்குபவர்களுக்கு ஏற்கெனவே உள்ள ஒதுக்கீட்டிற்குள் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

