சாய் சீயில் புறாக்களுக்குத் தீனி போடும் நடவடிக்கையால் குடியிருப்பாளர்கள் அதிருப்தி

சாய் சீயில் புறாக்களுக்குத் தீனி போடும் நடவடிக்கையால் குடியிருப்பாளர்கள் அதிருப்தி

2 mins read
d5341ac6-c47b-4a33-8562-5173b00469b4
புறாக்களின் எச்சங்கள் சுவர்களிலும் சன்னல்களிலும் படிந்துள்ளதால் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் தங்களது வீட்டு சன்னல்களைக் கூடத் திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். - படம்: ஏஷியாஒன்

சாய் சீ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பில் மூதாட்டி ஒருவர் புறாக்களுக்குத் தொடர்ந்து தீனி போட்டு வருவதால் தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சாய் சீ சாலையில் உள்ள புளோக் 805ன் ஐந்தாவது மாடியில் வசிக்கும் மூதாட்டி, கடந்த ஓராண்டாகத் தமது வீட்டின் சமையலறை சன்னல் வழியாகப் புறாக்களுக்குத் தீனி போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனால், தினமும் நூற்றுக்கணக்கான புறாக்கள் அந்த வீட்டின் வெளிப்புறச் சுவர்களிலும் சன்னல் ஓரங்களிலும் ஒன்று சேரத் தொடங்கியுள்ளன. புறாக்களின் எச்சங்கள் சுவர்களிலும் சன்னல்களிலும் படிந்துள்ளதால் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் தங்களது வீட்டுச் சன்னல்களைக் கூடத் திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்துப் பலமுறை புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியை நிர்வகிக்கும் ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் தேசியப் பூங்காக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த மூதாட்டியைத் தொடர்புகொள்ள அதிகாரிகள் முயன்றும் பலன் கிடைக்கவில்லை. தற்போது அந்தப் பேட்டையில் புறாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் குடியிருப்பாளர்கள் பறவைகளுக்குத் தீனி போடுவதைத் தடுக்கவும் விழிப்புணர்வு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வீவக குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் வனவிலங்குகளுக்குச் சட்டவிரோதமாகத் தீனி போடுபவர்களுக்கான தண்டனைகளை வலுப்படுத்தச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி, முதல்முறை தவறிழைப்பவர்களுக்கான அதிகபட்ச அபராதம் $5,000லிருந்து $10,000ஆக உயர்த்தப்படவுள்ளது. தவற்றைத் தொடர்பவர்களுக்கு $20,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்