சிங்கப்பூர் 58வது தேசிய தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டுப் பாடாங்கைச் சுற்றியுள்ள உணவகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடாங்கில் இயங்கும் உணவகங்கள் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை வரவேற்கத் தயாராகி வருவதால் அதற்கேற்ப தங்கள் உணவு அட்டைகளைப் புதுப்பித்து வருவதாக அந்த உணவகங்களின் உரிமையாளர்கள் கூறினர்.
வாடிக்கையாளர்களைச் சமாளிக்க அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைப் பணியமர்த்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய தின அணிவகுப்புக்காகச் சாலைகள் மூடப்பட்டிருந்தாலும், சில உணவகங்கள் பொது விடுமுறை நாள்களில் 50 விழுக்காடு வரை கூடுதல் வருவாயை எதிர்பார்ப்பதாகக் கூறின.
ஜூலை மாதத்தில் நடைபெறும் அணிவகுப்பு ஒத்திகைகளைக் காண பார்வையாளர்கள் அதிக அளவில் பாடாங்கிற்கு வருவார்கள். அப்போது, அங்குள்ள உணவகங்கள் 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் வருவாயை ஈட்டும் எனக் கூறப்பட்டது.
மெர்லயன் பூங்கா, எஸ்பிளனேட் பூங்கா, மரினா பே போன்ற மற்ற முக்கியப் பகுதிகளிலும் தேசிய தினத்தன்று வாணவேடிக்கைகளையும் வான்வழி சாகசங்களையும் காண மக்கள் அதிக அளவில் திரள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, மக்கள் நடமாட்டத்தைச் சீராக்க அந்தப் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைப்பார்கள் எனவும் அங்கு இயங்கும் உணவுக்கடைகள் தங்கள் தொழில் சீராக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.


