சென்ற ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை மாற்றியமைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமானோர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்பினருக்கும் இது பொருந்தும். 2024ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலிருந்து வீட்டுக்கடன் விகிதம் மூன்று விழுக்காட்டுக்குக்கீழ் குறைந்ததையடுத்து அந்தப் போக்கு காணப்பட்டது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைத்து வந்தது. அதனைத் தொடர்ந்து கூடுதலானோர் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை மாற்றியமைத்துக்கொள்வது தொடர்பான பரிவர்த்தனைகள் அதிகரித்ததாக உள்ளூர் வங்கிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து வேறொன்றுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். அதேவேளை, கடன் திட்டத்தை அதே வங்கி[Ϟ]யிலேயும் மாற்றியமைத்துக்கொள்ளலாம். அந்நடவடிக்கை கடன் மறுமதிப்பீடு (repricing) என்றழைக்கப்படுகிறது.
யுஒபி வங்கியில் வீவக வீடுகளுக்கான கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம் மாற்றியமைத்த பரிவர்த்தனைகள் ஆண்டு அடிப்படையில் சென்ற ஆண்டு 85 விழுக்காடு அதிகரித்தன. அதேவேளை, சென்ற ஆண்டு ஜூன்-நவம்பர் காலகட்டத்தில் அந்த விகிதம் ஆண்டு அடிப்படையில் 60 விழுக்காடு கூடியது.
அதே வங்கியில் தனியார் வீடுகளுக்கான விகிதம் ஆண்டு அடிப்படையில் 15 விழுக்காடு அதிகரித்தது.
அதேபோல், வீட்டுக்கடன் திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் வாடிக்கையாளர்கள் பலர் தங்களிடம் விசாரித்து வருவதாக டிபிஎஸ் வங்கியில் பயனீட்டாளர் வங்கிக் குழுவின் வீட்டு நிதிப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் செல்சி லிங் தெரிவித்தார்.

