பெஞ்சமின் ஷியர்ஸ் மேம்பாலத்தின் சாலைகள் இம்மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜூலை வரை மூடப்படும்.
அங்குள்ள கைப்பிடிச் சுவர் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதை அடுத்து 2026 ஜூலை வரை சாலைகள் மூடப்படுகின்றன.
வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் அந்தச் சுவர் தற்போதைய தரநிலைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலை 16ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
மேம்பாட்டுப் பணிகள் ஆறு கட்டங்களாக இடம்பெறும். ஒவ்வொரு கட்டத்திலும் சாலையின் ஒரு தடம் மட்டும் மூடப்படும். தேசிய தின அணிவகுப்பு, ஃபார்முலா 1 கார் பந்தயம் ஆகிய முக்கிய நிகழ்வுகளில் மட்டும் எந்தத் தடமும் மூடப்படாது.
1981ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 1.8 கிலோமீட்டர் நீளமான பெஞ்சமின் ஷியர்ஸ் மேம்பாலம் சிங்கப்பூரின் இரண்டாம் அதிபருக்குப் பின் பெயரிடப்பட்டது.
அது சிங்கப்பூரின் ஆக நீளமான, உயரமான பாலம். சிங்கப்பூர் ஆற்றிலிருந்து மரினா பே வரை அது நீள்கிறது.