டௌன்டவுன் பாதையில் உள்ள லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பயணிகள் விரைவில் இயந்திர மனிதன் ஒன்றிடமிருந்து வழிகாட்டுதல்களையும் பயணத் தகவல்களையும் பெறலாம்.
ஆலி (Ollie) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர மனிதன், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11 வரை அந்த நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இது வார நாள்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிலையத்தில் வலம் வரும்.
இதுகுறித்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் காணொளி ஒன்றுடன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) சமூக ஊடகத்தில் வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு உதவக்கூடும் என்பதை ஆராயும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது என்று ஆணையம் கூறியது.
இயந்திர மனிதன் தனியாக உலா வராது என்றும் அதிகாரிகளின் குழு ஒன்று எப்போதும் அதனுடன் இருக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
ஆணையம் வெளியிட்ட காணொளியில், “தம்மால் பயணிகளுக்கு வழிகாட்ட முடியும், அவர்கள் செல்ல வேண்டிய வழியைக் கண்டறிய உதவ முடியும், ரயில் அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்,” என்று இயந்திர மனிதன் பேசுவதைக் கேட்க முடிகிறது.
ரயில் நிலையத்தின் சூழலை நன்கு புரிந்துகொள்வதற்காக இயந்திர மனிதன் இப்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. இதனால் பயணிகள் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


