சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளையர்கள் தொடர்ந்து பங்காற்ற அரசாங்கம் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இளையர் ஆலோசனைக் குழுக்கள் (Youth Panels) மூலம், தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் இளையர்கள் அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
முதல் கட்டத்தில், நான்கு குழுக்களில் 120 இளையர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் குழுக்களின் வாயிலாக, இளையர்களும் அரசாங்கமும் இணைந்து கொள்கைகளை உருவாக்குகின்றனர்.
இதன் மூலம், அரசாங்கத்தின் செயல்பாடுகளை இளையர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிவதோடு, கொள்கைகள் சிங்கப்பூரர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப்பிடுவதில் உள்ள பல்வேறு சவால்களையும் அவர்கள் உணர்ந்து கொள்கின்றனர்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய இளையர் ஆலோசனைக் குழுக்கள் தொடங்கப்படும் என்றும், அதன் மூலம் அதிக அளவிலான இளையர்கள் முன்வந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் திரு வோங் கூறினார்.
இது குறித்த கூடுதல் விவரங்களை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர் துறைக்கான தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ அறிவிப்பார்.

