பேருந்து ஓட்டுநர் வேலை கவர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் பலருக்கு அது வாழ்வாதாரம் தருகிறது.
பேருந்து ஓட்டுநர் பணி குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றும் நோக்கில், சிங்கப்பூரில் உள்ள பேருந்து நிறுவனம் ஒன்று தனித்துவமிக்க பணியமர்வுத் திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
பணியில் சேர்பவர்களுக்கு $10,000 போனஸ் வழங்குவதற்கும் மேலாக, $5,000 மாதச் சம்பளம் வழங்க ‘வெஸ்ட்பாயிண்ட் டிரான்சிட்’ நிறுவனம் முன்வந்துள்ளது.
பணியமர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் 30 பேருந்து ஓட்டுநர்களைச் சேர்க்க அந்நிறுவனம் முற்படுகிறது.
பணியமர்த்தப்படும் ஒவ்வோர் ஓட்டுநரும் மொத்த மாதச் சம்பளமாக $5,000 பெறுவர் என்று அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
ஆனால், இதற்கு ஒரேயொரு நிபந்தனை உண்டு. ஓட்டுநர்கள் 45 இருக்கைகள் கொண்ட அல்லது அதைவிட பெரிய பேருந்தை ஓட்ட வேண்டும்.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெஸ்ட்பாயிண்ட் டிரான்சிட் பேச்சாளர் ஒருவர், ஓட்டுநரின் மொத்த சம்பளத்தில் உள்ளடங்கும் அம்சங்கள் குறித்து விவரித்தார்.
அடிப்படைச் சம்பளம், கைப்பேசிப் படித்தொகை, செயல்திறன் படித்தொகை ஆகியன அவை. செயல்திறன் படித்தொகை மாதத்திற்கு $1,250 வரை இருக்கும்.
பாதுகாப்புக் குறைபாடுகள், மோசமான வாகனப் பராமரிப்பு போன்ற விதிமீறல்களைச் செய்யாவிட்டால் செயல்திறன் படித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.
பேருந்து ஓட்டுநர்கள் திங்கள் முதல் சனி வரை அல்லது ஞாயிறு முதல் வெள்ளி வரை என வாரத்திற்கு 44 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
ஓட்டுநர்களைப் பணியமர்த்தும் திட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) தொடங்கும். பணியமர்த்தும் முதல் சுற்று நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முடிவுறும்.
பேருந்து ஓட்டுநர் பணி குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்ற முயற்சி
இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்த வெஸ்ட்பாயிண்ட் டிரான்சிட், ஓட்டுநர்களுக்கும் நிலைத்தன்மையும் நிதிப் பாதுகாப்பு வழங்குவதற்கான தனது விருப்பங்களைப் பகிர்ந்தது.
சிங்கப்பூரில் ஓட்டுநர்களுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்கவும் அந்நிறுவனம் முற்படுகிறது. கடந்த ஈராண்டுகளில் சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர்களுக்கான தேவை அதிகரித்துள்ள வேளையில், தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது வெளிநாட்டு ஓட்டுநர்கள் பலரும் சொந்த நாடு திரும்பிவிட்டதும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுபயணத்துறை மீட்சி கண்டு வருவதும் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணங்கள்.