குடும்பத்தோடு விடுமுறையைச் செலவிட திரு ஐசெக் கெல்வின் டான் லீ தொங், 49, ஜோகூர் கடற்கரை நகரத்திற்குச் சென்றிருந்தார்.
அங்கு, அவரும் அவருடைய 16 வயது மகனும் டெசாரு ரிசார்ட்டுக்கு அருகில் உள்ள கடலுக்குள் சென்றபோது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர் என்று மலேசிய ஊடகம் தெரிவித்தது.
அவரது மகன் பொதுமக்களால் மீட்கப்பட்டு, கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் மஸ்ரி இப்ராஹிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
காணாமற்போன திரு டானின் உடல் டிசம்பர் 28 காலை 5.30 மணியளவில் அருகிலுள்ள ஹோட்டலின் பாதுகாவலரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது என்றும் அவரது உடல் அவருடைய மனைவியால் அடையாளம் காணப்பட்டது என்றும் திரு மஸ்ரி கூறினார்.