ஆற்றில் கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட 49 வயது சிங்கப்பூரர், சிகிச்சை பலனின்றி ஐந்து நாள்களுக்குப்பின் உயிரிழந்தார்.
அந்த ஆடவர் சென்ற கார், இம்மாதம் 15ஆம் தேதி மலேசியாவின் கோத்தா திங்கி ஆற்றுக்குள் பாய்ந்தது.
அந்த காரிலிருந்து மீட்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் மலேசிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் காயம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 20ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக ஷின் மின் நாளிதழ் செய்தி தெரிவித்தது.
அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டி என்றும் ஜோகூர் பாரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விபத்து குறித்து இன்னும் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்பட்டது.