ஈசூனில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்பு பேட்டையில் கடந்த மாதம் நூர் அசார் அப்துல் அபாஸ் என்னும் ஆடவர் சட்டவிரோதமாக வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
ஆடவர் மீதான குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை (மே 28) நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு 5,000 வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது.
40 வயது அபாஸ் 25 முறை வெடிக்கும் வாணவேடிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 10.45 மணிவாக்கில் ஈசூன் ஸ்டிரீட் 61இல் உள்ள புளோக் 644 அருகே வெடிக்கச் செய்தார்.
வாணவேடிக்கை சத்தம் கேட்டு அங்குள்ள குடியிருப்பாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி ஆடவரை கைது செய்தனர். ஆடவரிடம் இருந்து மேலும் சில வாணவேடிக்கைகளை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
ஆடவர் கேலாங் வட்டாரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து வாணவேடிக்கைகளை வாங்கியுள்ளார். நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக அதை அபாஸ் வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாணவேடிக்கை சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

