சீனப் புத்தாண்டின் ஒன்பதாவது நாளான திங்கட்கிழமை (ஜனவரி 30), ‘டோட்டோ’ குலுக்கல் முடிவை மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
வெற்றியாளருக்கு மாபெரும் பரிசுத் தொகை காத்திருந்தது. முந்திய இரு குலுக்கல்களில் எவரும் முதல் பரிசை வெல்லாததே இதற்குக் காரணம்.
ஆனால், இந்த முறை ஒருவருக்கு அடித்தது யோகம். முதல் பரிசாக (Group 1) $7.2 மில்லியனை அவர் அள்ளிச் சென்றார்.
பொங்கோலின் ‘ஒயேசிஸ் டெரேசஸ்’ ஒருங்கிணைந்த மேம்பாட்டு வளாகத்தில் அமைந்துள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் ‘டோட்டோ’ அதிர்ஷ்டச்சீட்டை அவர் வாங்கியிருந்தார்.
13, 23, 25, 26, 44, 45 ஆகியவை வெற்றி எண்கள். 38 உபரி எண்.
பொதுவாக ‘ஜாக்பாட்’ பரிசுத் தொகை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுவது உண்டு. ஆனால், திங்கட்கிழமை குலுக்கலில் ஒரே ஓர் அதிர்ஷ்டசாலிதான் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
ஒப்புநோக்க, இரண்டாம் பரிசை (Group 2) அறுவர் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் $136,161ஐ வென்றனர். இந்தத் தொகை, முதல் பரிசுத் தொகையைவிட கணிசமாகக் குறைவு.
கடந்த வியாழக்கிழமையும் (ஜனவரி 26) கடந்த திங்கட்கிழமையும் (ஜனவரி 23) நடைபெற்ற ‘டோட்டோ’ குலுக்கலில் எவரும் முதல் பரிசை வெல்லவில்லை. இதனாலேயே ‘ஜாக்பாட்’ பரிசுத் தொகை $7.2 மில்லியனுக்குக் கூடியது.
பொங்கோல் டிரைவில் ஒயேசிஸ் எல்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் ‘ஒயேசிஸ் டெரேசஸ்’ உள்ளது. அங்கு கீழ்த்தளம் ஒன்றில் (Basement 1) ஃபேர்பிரைஸ் கிளை அமைந்துள்ளது.
இனிவரும் குலுக்கல்களில் அதிகமானோர் இந்தக் கடையில் ‘டோட்டோ’ எண்களை வாங்குவர் என்பதில் சந்தேகமில்லை.
‘ஒயேசிஸ் டெரேசஸ்’ 2018ல் திறக்கப்பட்டது. இதற்கு முன்பு அங்கு ஒருமுறை வெற்றி எண்களைக் கொண்ட குலுக்கல் சீட்டு விற்கப்பட்டிருந்தது.
அங்கு குலுக்கல் சீட்டை வாங்கிய ஒருவர், 2021 பிப்ரவரி 26ஆம் நடைபெற்ற ‘டோட்டோ’ குலுக்கலில் $2.38 மில்லியனை வென்றிருந்தார்.
இம்முறை $7.2 மில்லியன் பரிசை வென்றவர், ‘குவிக்பிக் ஆர்டினரி என்ட்ரி’ மூலம் குலுக்கல் சீட்டை வாங்கியிருந்தார். அதன் விலை $1. ஆனால், இந்தக் குலுக்கலுக்காக அவர் எத்தனை சீட்டுகளை வாங்கினார் என்பது தெரியவில்லை.
வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறும் அடுத்த ஆங் பாவ் சிறப்பு ‘டோட்டோ’ குலுக்கலில் வெற்றிப் பரிசாக ஏறக்குறைய $12 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.