அரசியல் பதவி வகிப்போர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் புதிதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவிற்கு உடனடியாக உயர்த்தப்படாது என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
மாறாக, அவர்களின் செயல்திறன், கடைசியாக சம்பளம் திருத்தி அமைக்கப்பட்ட காலம் போன்ற தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில், ஒருமுறை மட்டும் அவர்களுக்கு 9 விழுக்காடுவரை சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் தன்னிச்சையான குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
அதன் தொடர்பில் திரு சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
தற்போது எம்ஆர்4 நிலையிலுள்ள அமைச்சர்க்கான வருடாந்தரக் குறியீட்டுச் சம்பளம் $1.1 மில்லியனாக இருக்கும் நிலையில், அவரது சம்பளம் கிட்டத்தட்ட $1.2 மில்லியனாக உயரும் என்று அவர் சொன்னார்.
இந்த உடனடிச் சீரமைப்பிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட செயல்திறன், பொறுப்புகளின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் சான் கூறினார்.
திருத்தியமைக்கப்பட்ட சம்பளக் கட்டமைப்பு இவ்வாண்டு அக்டோபர் 15ஆம் தேதிமுதல் நடப்பிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


