அரசியல் பதவிகள் வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள மறுஆய்வு குறித்து அரசாங்கம் அளித்துள்ள அமைச்சர்நிலை அறிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) உரையாற்றிய பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் தாம் தாக்கல் செய்த அமைச்சர் நிலை அறிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிவது மிகவும் அவசியம் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த அறிக்கைகளை முழுமையாக ஆராய்ந்து பரிசீலிக்க போதிய அவகாசம் அளிக்கும் வகையில், வரும் வியாழக்கிழமை இதற்கான தீர்மானத்தை முன்மொழிய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்றைய நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பாக, நிகழ்ச்சி நிரலின் கடைசிப் பொருளாக இந்த விவாதத்தைச் சேர்க்குமாறு அவர், நாடாளுமன்ற நாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பள உயர்வு, கொள்கை முடிவுகள் குறித்த விளக்கங்கள், அது சார்ந்த தெளிவுகள் ஆகியவற்றைப் பெற விரும்புவோர், வியாழக்கிழமை நடைபெறும் விவாதத்தின் போது தங்களின் கேள்விகளை எழுப்பலாம் என்றும் தற்காப்பு அமைச்சருமான திரு சான் கேட்டுக்கொண்டார்.


