பேருந்தில் தவறவிட்ட கடப்பிதழ், $2,000 ரொக்கம், $30,000 மதிப்பிலான தங்க நகைகள் அடங்கிய பையை, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்களின் உதவியால் மாது ஒருவர் அன்றே மீட்டுள்ளார்.
‘கே’ என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அந்தப் பயணி, அங் மோ கியோவில் இறங்கிய பிறகே, பையை பேருந்தில் தவறவிட்டதை உணர்ந்தார். மலேசியாவில் நடக்கவிருக்கும் தம் மகளின் திருமணத்திற்காக நகையையும் பணத்தையும் அவர் வைத்திருந்தார்.
உடனே அங் மோ கியோ பேருந்து நிலையத்தில் இருந்த எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்களை அணுகி அவர் உதவி கோரினார்.
உதவி மேற்பார்வையாளர் நித்யானந்தன் பால்னே உடனடியாக பேருந்துச் சேவை 853ஐ இயக்கும் ‘டவர் டிரான்சிட்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டார். அடுத்த 20 நிமிடங்களில், சக பயணி ஒருவர் அந்தப் பையைக் கண்டெடுத்து ஈசூன் பேருந்து நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்தது.
கையில் பணமில்லாத அப்பெண்ணுக்கு, மூத்த மேற்பார்வையாளர் அலெக்ஸ் டான் தம் பணத்தில் டாக்சி முன்பதிவு செய்து உதவினார்.
பொருள்களை மீட்ட அப்பெண்ணும் அவரது மகளும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து, கோலாலம்பூரில் நடக்கவுள்ள திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, அப்பெண் அங் மோ கியோ பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று நன்றி கூறியதுடன் திரு டானிடம் டாக்சி கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்தார்.
ஊழியர்களின் கடமை உணர்வைப் பாராட்டி அவர் எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இணையவாசிகள் ஊழியர்களின் உடனடி உதவியைப் பாராட்டி வருகின்றனர்.

