‘கண்டதும் காதல்’ என்பது இந்தியத் திரைப்படங்களில் பொதுவாக இடம்பெறும் காட்சி.
ஆனால், பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் ஊழியர்கள் இருவருக்கு இது நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது, அதுவும் லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில்.
வாடிக்கையாளர் சேவை அதிகாரியான கேத்லீனின் “அழகான புன்னகையை” கண்ட உதவி நிலைய மேலாளரான அமீன், அவர்மீது காதலில் விழுந்தார்.
தயக்கம் காரணமாக கேத்லீனுடன் உரையாடலைத் தொடங்க அமீன் வாய்ப்பை நழுவ விட்டுவிடுவார். ஆனால், விதி இவர்களை ஒன்றாகச் சேர்த்து வைத்தது. “என்னைத் திருமணம் செய்துகொள்வீரா?” என்று 2020ல் கேத்லீனிடம் காதலை முன்மொழிந்தார் அமீன்.
இப்போது மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை வாழும் இத்தம்பதி, காதல் மலர்ந்த லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திற்குத் திரும்பினர், திருமணப் புகைப்படங்கள் எடுப்பதற்காக.
லிட்டில் இந்தியா நிலையத்தில் அமீன் ஒருநாள் பணியமர்த்தப்பட்டபோது, கேத்லீனை அவர் சந்திப்பதற்கான சூழல் ஏற்பட்டது. கேத்லீனின் அழகான புன்னகையைக் கண்டது அமீன் தன்னையே மெய்மறந்து போனார்.
எனினும், கேத்லீனை அணுக அமீன் கூச்சப்பட்டார். இருவருக்கும் இடையே உரையாடல் ஏற்படாமல் அன்றைய தினம் கடந்துவிட்டது.
ஆனால், ரயிலில் கேத்லீன் பணியில் இருந்தபோது இவ்விருவரும் மீண்டும் சந்திக்க நேரிட்டது. சக ஊழியர் ஒருவருடைய உதவியுடன், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
ஃபேஸ்புக்கில் இருவரும் நண்பர்களாகினர். பிறகு இவர்களுக்கு இடையிலான நட்பு காதலாக மலர்ந்தது.
ஓராண்டு பழக்கத்திற்குப் பிறகு, 2020ல் கேத்லீனிடம் அமின் காதலை முன்மொழிந்தார். அதை கேத்லீன் ஏற்றுக்கொண்டார்.
திருமண நாளன்று இத்தம்பதி தாங்கள் முதன்முதலில் சந்தித்த லிட்டில் இந்தியா ரயில் நிலையத்திற்குத் திரும்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தங்களது முதல் சந்திப்பு குறித்த பழைய நினைவுகளில் இவர்கள் திளைத்தனர்.
இத்தம்பதியின் இதயங்களில் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்திற்குத் தனி இடம் உண்டு. இவர்களது காதல் கதை எப்படி தொடங்கியது என்பது குறித்த காட்சிகளை இந்நிலையம் கண்முன் கொண்டு வந்தது.
இவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம், இத்தம்பதி நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. மற்றொரு புகைப்படத்தில், திருமண உடையில் இவர்கள் புன்முறுவலுடன் நடனமாடுவது தெரிந்தது.
தங்களது வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இத்தம்பதிக்கு தமிழ் முரசு தன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி: mustsharenews