பள்ளிப் பேருந்து நிறுவனங்கள், வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எரிபொருள் பயன்பாட்டுக்காக சேவைக் கட்டணத்தை 20 விழுக்காடுவரை உயர்த்தக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெறுகிறது.
குறைந்தது மூன்று பள்ளிகளுக்குச் சேவை வழங்கும் பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் 10லிருந்து 20 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் விதிக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. செயின்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் பள்ளி, செயின்ட் ஸ்டீஃபன்ஸ் பள்ளி, மெரிடியன் தொடக்கப் பள்ளி ஆகியவை அந்த மூன்று பள்ளிகள்.
முன்கூட்டியே தகவல்
கட்டணங்களை மாற்றுவது குறித்து பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் பள்ளிகளுடன் கலந்துபேசிவருவதாகவும் பள்ளி விடுமுறைக் காலத்தில் மாற்றங்களைப் பற்றிப் பெற்றோரிடம் தெரியப்படுத்திவருவதாகவும் கல்வி அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்தது.
இது, பள்ளி மீண்டும் தொடங்கிய பிறகு பிள்ளைகளுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைப் பெற்றோர் செய்துகொள்ள வகைசெய்யும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
எத்தனை பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தவுள்ளன என்ற தகவலை அமைச்சு வெளியிடவில்லை.
எடுத்துக்காட்டாக, செயின்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் பள்ளிக்குச் சேவைகளை வழங்கும் ஆர்எஸ் டிரான்ஸ்போர்ட் சர்விசஸ் நிறுவனம், எரிபொருள் பயன்பாட்டுக்காகக் கட்டணத்தை 11 விழுக்காடு அதிகரிக்கவுள்ளது. கட்டண அதிகரிப்பு விகிதம், கல்வி அமைச்சு விதித்த உச்சவரம்புக்குக் குறைவானது.
தற்போதைய நிலவரப்படி, செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியில் இருவழிப் பேருந்துச் சேவைக்கான கட்டணம் $200லிருந்து $280ஆக இருப்பதாக அதன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
பயண தூரம், நேரம் ஆகியவற்றைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். அக்கட்டணம் இனி $222லிருந்து $310,80 வரை உயர்த்தப்படவுள்ளது.
நிறுவனம் சேவை வழங்கும் மற்ற பள்ளிகள்
கோங் ஹுவா பள்ளி, செயின்ட் ஜோசஃப்ஸ் ஜூனியர் கல்விக் கழகம், செயின்ட் மார்கரட்ஸ் தொடக்கப் பள்ளி ஆகியவற்றுக்கும் ஆர்எஸ் டிரான்ஸ்போர்ட் சர்விசஸ் பேருந்துச் சேவை வழங்குகிறது. அப்பள்ளிகள் கட்டண உயர்வுக்கு உட்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.
அதேபோல் லிபர்ட்டி டிரான்ஸ்போர்ட் சர்விசஸ், ஷான்ஸ் டிரான்ஸ்போர்டடேஷன் சர்விசஸ் போன்றவையும் கட்டணத்தை உயர்த்தப்போவதாகக் கூறியுள்ளன.

