மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட், அண்மைய விமானச் சேவை இடையூறுகளுக்கு விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளால் ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையே காரணம் என்று கூறியுள்ளது.
மே 2 முதல் 6ஆம் தேதி வரை சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட அல்லது தரையிறங்க திட்டமிடப்பட்ட 33 ஸ்கூட் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மே 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
மே 7ஆம் தேதி, இரண்டு ஸ்கூட் விமானச் சேவை நேரம் மாற்றப்பட்டன. ரத்து செய்யப்படவில்லை. மே 8ஆம் தேதி ஸ்கூட் விமான சேவை நேரம் மாற்றப்பட்டது. மே 9ஆம் தேதி சேவைத் தடை எதுவும் இல்லை.
“விநியோகச் சங்கிலிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையினால், விமானங்கள் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டுக் காரணங்களால் 2024 மே மாதத்தில் திட்டமிடப்பட்ட பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) மலிவுக் கட்டணச் சேவையான ஸ்கூட், மே 9 அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
உதிரிப்பாக பற்றாக்குறை விமானப் போக்குவரத்துத் துறையை ஒட்டுமொத்தமாகப் பாதிப்பதாக விமான நிறுவனம் தெரிவித்தது. எனினும் பாதிக்கப்பட்ட உதிரிப் பாகங்கள், விமான வகைகள் குறித்து அது விவரிக்கவில்லை. சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கான மற்ற செயல்பாட்டுக் காரணங்கள் குறித்தும் அது கருத்து தெரிவிக்கவில்லை.
சேவைத் தடைகளுக்காக விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்புக் கோரியது. பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களையும் முன்கூட்டியே தொடர்புகொண்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எஸ்ஐஏ, ஸ்கூட் உள்ளிட்ட பிற விமானங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படாத விமானச் சேவைக்கான முழுத் தொகையையும் திரும்பப்பெறலாம் என்று ஸ்கூட் கூறியது.