மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூருக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையிலான ஆறு விமானச் சேவைகளை ரத்துசெய்துள்ளது.
இந்தோனீசியாவுக்கான சில பயணங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை பலமுறை குமுறியதைத் தொடர்ந்து, அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த எரிமலை செவ்வாய்க்கிழமை மாலை வெடிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக, வானத்தை நோக்கி ஏறக்குறைய 1.5 கிலோமீட்டர் தொலைவில் எரிமலை சாம்பலைக் கக்கியது.
உள்ளூர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றி, சுலவேசி தீவின் மனாடோ நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தை மூடினர்.
விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஸ்கூட் கூறியது.
வெள்ளிக்கிழமை புறப்படவிருந்த ‘டிஆர் 216’, ‘டிஆர் 217’ ரக விமானங்களின் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டன. அவை சிங்கப்பூருக்கும் மனாடோவுக்கும் இடையிலான விமானப் பயணங்கள்.
முன்னதாக வியாழக்கிழமையன்று, சிங்கப்பூருக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையே நான்கு விமானச் சேவைகளை ஸ்கூட் ரத்துசெய்தது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவிவருவதாக ஸ்கூட் தெரிவித்தது.