எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி பெரும்பாலும் போட்டியிடாது.
“எங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் இன்னமும் ஆராய்ந்து வருகிறோம். ஆனால், தற்போதைய கட்டத்தில் அது சாத்தியம் குறைவாகத் தெரிகிறது. ஏனெனில், எங்களிடமுள்ள வளங்களை ஒன்றுதிரட்ட இயல வேண்டும்,” என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் கூறியுள்ளார்.
கடந்த மூன்று தேர்தல்களில் அக்குழுத்தொகுதியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டிருந்தது.
புக்கிட் பஞ்சாங் தனித்தொகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) தேர்தல் முழக்கவரியை அறிவிக்கும் நிகழ்ச்சியில் டாக்டர் சீ இதனைத் தெரிவித்தார்.
“பெயருக்கு எத்தனை வேட்பாளர்களை வேண்டுமானாலும் நிறுத்தலாம். ஓரிரு சுவரொட்டிகளை ஒட்டி, மக்கள் வேட்பாளர்களைப் பார்த்தும் பார்க்காததுபோன்ற நிலை ஏற்படும். எண்ணிக்கையைவிட பணியின் ஆழம் முக்கியம் என்பது எங்கள் கருத்து,” என்றார் அவர்.
நேர்மையான, உறுதியான பிரசாரங்கள்மூலம் ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடைவதும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசி, அவர்கள் எதை நோக்கி வாக்களிக்கிறார்கள் என்பதையும் புரியவைக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் டாக்டர் சீ சொன்னார்.
புக்கிட் பஞ்சாங்கில் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் பால் தம்பையா, கடந்த தேர்தலைவிட இம்முறை கட்சி மேலும் சிறப்பாகச் செயலாற்றும் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இதுவரை செம்பவாங் குழுத்தொகுதி, மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதி, செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி, புக்கிட் பஞ்சாங் தனித்தொகுதி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியுடவுள்ளதை ஜனநாயகக் கட்சி உறுதிசெய்துள்ளது.