சிங்கப்பூரை ஆட்சி செய்துவந்த பிரிட்டன் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானிய ராணுவத்திடம் சரணடைந்தது.
அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த மக்களுக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன.
ஒன்று, ஜப்பானியர்களை எதிர்த்துச் சண்டை போடுவது. மற்றொன்று வேறு நாடுகளுக்குத் தப்பித்துச் செல்வது.
இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் அன்று சிங்கப்பூரைவிட்டு சிஸ்டர்ஸ் தீவு வழி இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுக்குச் செல்லும் படகுகள் மூலம் தப்பியோடினர்.
தற்போது, 80 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கடல் பயணத்தின் அனுபவம் குறித்து பொதுமக்களுக்குப் புதிய மரபுடைமைச் சுற்றுலா மூலம் எடுத்துரைக்கப்படவுள்ளது.
அந்தக் கடல்வழிப் பாதையிலும் பொதுமக்கள் பயணம் செய்வர்.
பிப்ரவரி 21 முதல் மார்ச் 8ஆம் தேதிக்கு இடையில் உள்ள வார இறுதி நாள்களில் அந்தச் சுற்றுலா பயணம் இடம்பெறுகிறது.
இரண்டாம் உலகப் போர் நடந்த அந்தக் காலகட்டத்தில் ஜப்பானியர்களின் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றிலிருந்து குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எப்படிக் கடல்வழி தப்பிச் சென்றனர் என்பதை இந்தச் சுற்றுலா விளக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதைத் தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கடல்வழிப் பயணத்தை டாக்டர் ஜான் குவாக் வழிநடத்துகிறார். இதுபோன்ற சுற்றுலா பயணங்களை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய அனுபவம் டாக்டர் ஜானுக்கு உண்டு.
150 நிமிடங்கள் நடக்கும் அந்த மரபுடைமைப் பயணம் மாலை 5 மணிக்குத் தொடங்கும். நுழைவுச்சீட்டு விலை 55 வெள்ளி.
இருப்பினும் பிப்ரவரி 12 முதல் 20 வரையிலான விற்பனைக் காலத்தில் வாங்குபவர்கள் 50 வெள்ளி செலுத்தினால் போதும்.

