செங்காங் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) சாலையோர மேடையில் சென்ற காரின் ஓட்டுநரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
அப்பர் சிராங்கூன் ரோட்டை நோக்கிய செங்காங் ஈஸ்ட் டிரைவ் சாலையில் விபத்து நிகழ்ந்ததாக வெள்ளிக்கிழமை இரவு 9.35 மணிக்குக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தக் கார் சறுக்கியதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை குறிப்பிட்டது.
“காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்குள் கார் ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஓட்டுநரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன,” என்று காவல்துறை சனிக்கிழமை (ஜூன் 13) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை சொன்னது.
வெள்ளை கார் ஒன்று சாலையோர மேடைமேல் நடைபாதைக்கு அருகே உள்ள புல் தரையில் இருந்த காட்சி SG Road Blocks டெலிகிராம் குழுவில் பகிரப்பட்ட படத்தில் தெரிந்தது. அந்த கார் ஓட்டுநரின் இருக்கைக் கதவு திறந்திருந்தது.
சம்பவ இடத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவரும் காணப்பட்டனர்.

