ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் பாதுகாப்புப் பரிசோதனை நடத்தப்படும்.
அவசரகால தயார்நிலைத் திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் பயண நேரம் வழக்கநிலையைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பயணிகள் பரிசோதிக்கப்படுவர். உலோகக் கண்டுபிடிப்பு இயந்திரம் வழியாக அவர்கள் நடந்து செல்ல வேண்டும்.
பயணிகளின் உடைமைகள் எக்ஸ்-ரே இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலை 29ஆம் தேதியன்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று அதிகமான பொருள்களுடன் டோபி காட் எம்ஆர்டி நிலையத்துக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் போக்குவரத்து நிலையங்களில் அவசரநிலை ஏற்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவும் இத்தகைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.
அவசரநிலை ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இதுபோன்ற திட்டங்கள் பொதுமக்களுக்கு கற்றுத் தருவதாக அது கூறியது.

