புதிய மேம்பாடுகள் காரணமாக பொங்கோலின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால் சிலேத்தார் லிங்க் மேம்பாலச் சாலை வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) திங்கட்கிழமை தெரிவித்தது.
சிலேத்தார் லிங்க்கையும் தெம்பனிஸ் விரைவுச்சாலையையும் இணைக்கும் இந்தப் புதிய மேம்பாலம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்குப் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என எல்டிஏ மேலும் கூறியது.
“2017ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இம்மேம்பாலத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மேம்பாலத்தை மத்திய விரைவுச்சாலை, சிலேத்தார் விரைவுச்சாலை, காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை ஆகியவற்றிலிருந்து அணுக முடியும்.
“மேம்பாலம் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதால், வாகன ஓட்டிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் திசையைக் காட்டும் போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்படும். வாகன ஓட்டிகள் தங்கள் வழித்தடங்களை முன்கூட்டியே திட்டமிடவும். அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல உதவுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அறிகுறிகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என எல்டிஏ தெரிவித்தது.