கொவிட்-19 காலகட்டத்தில் சுயமாகப் பல் மருத்துவ சிகிச்சைகளைச் செய்யக் கற்றுக்கொண்ட மாது ஒருவர் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய சேவைகளை வழங்கத் தொடங்கினார்.
சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் அறைகளில் பல் இறுக்கிகளைப் பராமரித்தல் போன்ற பல் மருத்துவச் சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார்.
இருப்பினும், அந்த மாது செய்த சிகிச்சைக்குப் பின், தமது பல் இடுக்கைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்று வாடிக்கையாளர் ஒருவர் அதிகாரிகளிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து, அவரின் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
37 வயது மலேசியரான சித்தி ஷாஹ்ரிமா அப்துல் ரஹிமுக்கு மாவட்ட நீதிமன்றம் $2,500 அபராதம் விதித்தது.
அவர் பல்மருத்துவப் பதிவுச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். மற்றொரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சித்தி, ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரப் பணியாளராகப் பணிபுரிவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் சித்தி, ஜோகூரில் உள்ள பல் மருத்துவரை அடிக்கடி காணச் செல்வார். இருப்பினும், கொவிட்-19 கிருமிப்பரவலைத் தடுக்க, மலேசியா நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை விதித்தபோது, அவரால் பல் மருத்துவ சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை.
அவர் யூடியூபில் காணொளிகளைப் பார்த்து தமது சொந்த பல் இறுக்கிகளில் சிகிச்சை செய்ய கற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தனது கேரசெல் கணக்கில் பல் மருத்துவச் சேவைகளை விளம்பரப்படுத்தினார். அவர் குறுகிய கால அனுமதி அட்டைகளைக் கொண்டு சிங்கப்பூருக்குள் வந்து அந்தச் சட்டவிரோதமான பல மருத்துவச் சேவைகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.