கல்வி அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் எட்மண்ட் லாம் கியட் சூங் 2022இல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியபோது, மற்றொரு காரை மோதி அதிலிருந்த ஓட்டுநரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
43 வயதான அவர் அமைச்சின் பாதுகாப்பு, தயார்நிலைப் பிரிவைச் சேர்ந்தவர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக ஒரு குற்றச்சாட்டையும், ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
நீதிமன்ற வழக்கு முடிந்ததும் அவர்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
கல்வி அமைச்சில் ஒரு பிரிவின் தலைவராக இருக்கும் லாம், சென்ற டிசம்பரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 320 மீட்டர் தொலைவுக்கு, போக்குவரத்துக்கு எதிராக வாகனத்தை ஓட்டி, மற்றொரு காரை மோதியதாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
விபத்து காரணமாக 54 வயதான மற்றோர் ஓட்டுநர் காயமடைந்தார். இருப்பினும், அந்த நேரத்தில் அவருடைய உடல்நிலை பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.
லாம், ஆகஸ்ட் 11ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறை குற்றம் புரிவோருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.