2026ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்து ஒருவர்க்கொருவர் பரிவு காட்டி இனி வரும் ஆண்டுகளில் வளப்பமான, மீள்திறன்மிக்க நாட்டைத் தொடர்ந்து உருவாக்கவேண்டும் என மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வாழ்த்தியுள்ளார்.
புத்தாண்டுக்கான தமது வாழ்த்துப் பதிவை புதன்கிழமை (டிசம்பர் 31) சமூக ஊடகங்களில் வெளியிட்ட திரு லீ, நன்றி நவில்வதற்கு அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
எதிர்பார்த்ததைவிட வலுவான பொருளியல் முன்னுரைப்பையும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள வீரர்களையும் இதற்கு உதாரணங்களாகத் திரு லீ சுட்டினார்.
நம்மில் பலருக்கு, அன்பார்ந்தவர்களுக்கான நேரமும் நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“தி ஆல்பட்ராஸ் கோப்புடன் எஸ்ஜி60 நிறைவடைந்துள்ளது. சிங்கப்பூர் எப்படித் தொடங்கியது என்பதையும் நமது வெற்றி, தொடர்ச்சி ஆகியவை குறித்து நாம் ஏன் மெத்தனத்துடன் இருக்கக்கூடாது என்பதையும் இந்தக் கண்காட்சி நினைவுபடுத்துகிறது,” என்றும் திரு லீ கூறினார்.

