பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளருமான டெஸ்மண்ட் டான் தாத்தாவாகியுள்ளார்.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவை ஆற்றிவரும் 55 வயது திரு டான், இந்த நற்செய்தியை ஜூலை 27ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவொன்றின் மூலம் பகிர்ந்துகொண்டார்.
தமது பேரன் எலைஜா ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூலை 26ஆம் தேதி பிறந்ததாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
தமது பேரனின் வருகையானது தமது குடும்பத்தில் ஒரு சிறப்புமிக்க தற்செயல் நிகழ்வைக் குறித்து நிற்பதாகத் திரு டான் தெரிவித்தார்.
“கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு முன்பு நான் தந்தையானேன். நேற்றைய தினம், எனது மகனும் தந்தையாகியுள்ளார். அதே மருத்துவமனையில் எனது மகனும் தந்தையாகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
தமது மனைவியுடன் சேர்ந்து பேரனை முதன்முறையாகக் கைகளில் ஏந்திய தருணமானது, சொந்தக் குழந்தைகளைக் கைகளில் ஏந்திய பழைய நினைவுகளுக்குக் கொண்டு சென்றதாகத் திரு டான் குறிப்பிட்டுள்ளார்.

