அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் தன்னிச்சையான குழு முன்மொழிந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்களின் ஓய்வு, சிங்கப்பூரின் தலைமைத்துவ சவால் ஆகியவை பிரதமர் வோங்கின் அமைச்சர்நிலை உரையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
அதன்படி, அமைச்சரவையின் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இந்த மூத்த தலைவர்களுக்கு உடனடியாக ‘முழுமையான மாற்று நபர்களை’ கண்டறிவது மிகவும் கடினமானது என்பதை உரையின்போது திரு வோங் சுட்டினார் .
நீண்ட கால அனுபவமும், முதலீட்டாளர்கள் அனைத்துலகப் பங்காளிகளின் நம்பிக்கையைப் பெற்றவருமான துணைப்பிரதமர் கான் கிம் யோங், சிக்கலான பிரச்சினைகளின் மையப் புள்ளியைக் கண்டறிந்து தீர்வு காணும் தனித்துவமான ஆற்றல் கொண்ட மூத்த அமைச்சர் கா. சண்முகம், உலகளாவிய அளவில் வெளியுறவு சார்ந்த ஆழமான அறிவாற்றலும் விரிவான நல்லுறவு இணைப்புகளும் கொண்ட வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் இடங்களை உடனடியாக நிரப்புவது எளிதல்ல என்றும் திரு வோங் விவரித்தார்.
“இதன் காரணமாகவே, தகுதியான நபர்களை ஆரம்பத்திலேயே அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுக்குப் படிப்படியாகக் கூடுதல் பொறுப்புகளை வழங்கித் தயார்ப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், கொண்டுவரப்படும் அனைவரும் இந்த உயரிய பொறுப்புகளுக்கு ஏற்ப வளர்வார்கள் என்றும் கூற முடியாது என்பதால், திறமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவசியம்,” என்றும் பிரதமர் விளக்கினார்.


