பெரியவர்களுக்கான கட்டண அட்டை, சலுகை கட்டண அட்டை உட்பட பொதுப் போக்குவரத்துக் கட்டணம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் உயரவுள்ள போதிலும், பேருந்துகள், பெருவிரைவு ரயில்கள் இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய மாதாந்திர பொதுப் போக்குவரத்து கட்டண அட்டையின் விலை 10 விழுக்காடு வரை குறையவுள்ளது.
அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், தேசிய சேவையாளர்கள், முதியவர்கள் ஆகியோர் தங்கள் பொதுப் போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாதாந்திரப் பயண அட்டைகளைப் பயன்படுத்துமாறு பொதுப் போக்குவரத்து மன்றம் திங்கட்கிழமை அறிவுறுத்தியது.
“மாதாந்திரப் பொதுப் போக்குவரத்து கட்டண அட்டையின் விலைக் குறைப்பு, அடிக்கடி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களை அந்த அட்டையை வாங்க ஊக்குவிக்கும். அதைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் பொதுப் போக்குவரத்துச் செலவுகளை மாதத்திற்கு $4.50 முதல் $9.50 வரை அவர்கள் குறைக்க முடியும்,” எனத் திங்கட்கிழமை நடைபெற்ற கட்டண திருத்தங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவர் ஜேனட் ஆங் தெரிவித்தார்.
மேலும், பெரியவர்களுக்கான மாதாந்திர கட்டண அட்டைகள் இருப்பது குறித்துப் போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.