சுங்கை காடுட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட மூன்று தீவைப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது சனிக்கிழமை (மார்ச் 14) குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.
அந்த 20 வயது ஆடவர் கடந்த மார்ச் 12ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் தீமூட்டி ஒன்றும் கையுறைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
56 சுங்கை காடுட் டிரைவ், 51 சுங்கை காடுட் ஸ்திரீட் 1, 8, சுங்கை காடூட் கிரசன்ட் ஆகிய பகுதிகளில் மார்ச் 10 முதல் மார்ச் 12 வரை, தொடர்ந்து மூன்று நாள்களில் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் குறித்துத் தகவல் கிடைத்ததாக மார்ச் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை கூறியது.
மூன்று தீச்சம்பவங்களும் வேண்டுமென்றே தொடங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மார்ச் 10, 11ஆம் தேதிகளில் ஏற்பட்ட தீயை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்தனர். மார்ச் 12ஆம் தேதி ஏற்பட்ட தீயை, குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே, பொதுமக்கள் அணைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மூன்று சம்பவங்களிலும் யாருக்கும் காயம் இல்லை.

