லிட்டில் இந்தியாவிலும் ரோச்சோர் கேனல் சாலையிலும் வெவ்வேறு குற்றங்கள் புரிந்ததற்காக 16 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்கள் அறுவரும் பெண் ஒருவரும் அமலாக்க நடவடிக்கைகளின் அங்கமாகக் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதக் கும்பல்களின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 26 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்கள் நால்வரும் அவர்களில் அடங்குவர்.
அரசாங்க ஊழியரைக் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காகவும் அவரிடம் அவதூறான சொற்களைப் பயன்படுத்தியதற்காகவும் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், போலியான மின்னணு ஆவணத்தைப் பயன்படுத்தியதற்காகவும் பொது இடத்தில் மதுபோதையில் காணப்பட்டதற்காகவும் 16 வயதுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதோடு, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 40 வயதாகும் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் 38 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்ட ஆடவர் இருவர் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டனர். ஐந்து மின்சிகரெட்டுகளும், அது தொடர்பான கருவிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய காவல்துறைப் பிரிவின் தலைமையில், குற்றப் புலனாய்வுத் துறையின் ரகசியக் கும்பல்களுக்கு எதிரான பிரிவு ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொது இடங்களில் ரகசியக் கும்பல்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், 18 கேளிக்கை விடுதிகளில் ஏறத்தாழ 100 பேரிடம் இச்சோதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரகசியக் கும்பல்களின் நடவடிக்கைகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.
சட்டவிரோதக் கும்பலில் உறுப்பினராக இருந்தால் அதிகபட்சமாக $10,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அரசாங்க ஊழியரைக் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
அரசாங்க ஊழியரை நோக்கி அவதூறான சொற்களைப் பயன்படுத்தியதற்கு அதிகபட்சமாக $5,000 அபராதம், 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
போலியான மின்னணு ஆவணத்தைப் பயன்படுத்தியதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொது இடத்தில் மது அருந்திவிட்டு சுயநினைவின்றி இருந்ததற்கு அதிகபட்சமாக $1,000 அபராதம், ஒரு மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“சிங்கப்பூரின் பொதுப் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்திற்கு, அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு ரகசியக் கும்பல் நடவடிக்கைகளையும் காவல்துறை சகித்துக்கொள்ளாது. இதைத் தடுக்கும் நோக்கில் பொதுக் கேளிக்கை விடுதிகள், இரவு விடுதிகள், மக்கள் கூடும் பிரபலமான இடங்களில் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்,” என்று காவல்துறையின் துணை உதவி ஆணையரும் மத்திய காவல்துறைப் பிரிவின் தலைவருமான வோங் கெங் ஹோ தெரிவித்தார்.
இது தொடர்பான காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.