அங் மோ கியோவில் உள்ள பலமாடி கார்நிறுத்தும் இடத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 27) ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் கார்கள் சேதமடைந்தன.
புளோக் 712ஏ அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள கார் நிறுத்துமிடத்தில் தீப்பிடித்ததாகப் பிற்பகல் 12.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மூன்றாவது தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு கார்களில் மூண்ட தீயை, படையினர் அணைத்தனர். அந்த இரு கார்களும் மின்வாகனங்கள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் அது கூறியது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
மூத்த அமைச்சரும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லீ சியன் லூங், அந்தத் தீச்சம்பவம் தொடர்பாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிர கார்நிறுத்தத்தின் இதர பகுதிகள் வழக்கம்போல இயங்குவதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனப் புத்தாண்டுக்குச் சற்று முன்னதாக துரதிருஷ்டவசமாக அந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூறிய திரு லீ, குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தீப்பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.