நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்ப்பு: ஐசிஏ

நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்ப்பு: ஐசிஏ

1 mins read
380ccef2-508d-4c34-8def-7eadb52658f7
ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின நீண்ட வார இறுதியை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதிகாலை அல்லது பிந்தைய இரவு வேளைகளில் பயணம் செய்யுமாறு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) ஆணையம் கேட்டுக்கொண்டது.

ஹஜ்ஜுப் பெருநாள், விசாக தின வார இறுதியின்போதும் ஜூன் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது 18 மில்லியனுக்கும் அதிகமானோர் நிலவழிச் சோதனைச்சாவடிகளைக் கடந்தனர்.

குறிப்பாக, ஜூன் 19ஆம் தேதி ஒரே நாளில் 5,98,000 பயணிகள் எல்லையைக் கடந்தனர். மலேசியாவில் நிலவிய வாகன நெரிசல் காரணமாக, கார்களில் சென்றவர்கள் குடிநுழைவுச் சோதனையை முடித்துக் கடக்க மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையே, உலகளாவிய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு சோதனைச்சாவடிகளில் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் விரைவாக எல்லையைக் கடக்க ‘மைஐசிஏ’ செயலியில் உருவாக்கப்படும் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சாலையில் வரிசையை முந்திச்செல்லும் வாகனவோட்டிகள் மீண்டும் வரிசையின் இறுதியில் வந்து சேருமாறு திருப்பி அனுப்பப்படுவர். விதிமீறல்களில் ஈடுபட்ட 52 வாகனவோட்டிகள்மீது அண்மையில் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வாகனவோட்டிகள் சாலை விதிகளைப் பின்பற்றி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
ஐசிஏசோதனைச் சாவடிதேசிய தினம்