இரு சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு ஆடவர் மற்றும் ஒரு பெண் என 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
20 முதல் 41 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இதன் தொடர்பில் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியிட்ட அறிக்கையில், குற்றங்கள் நடந்தபோது பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்துல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணின்மீது, ஆட்கடத்தல், சட்டவிரோத பாலியல் சேவைகள், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றம் சுமத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் ஆட்களைச் சேர்த்தல், கடத்துதல், மறைத்து வைத்தல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $100,000 வரை அபராதமும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
மறுபுறம், கைது செய்யப்பட்ட எட்டு ஆடவரும் சிறுமியிடம் பணம் கொடுத்து வணிக ரீதியாக பாலியல் சேவைகளைப் பெற்றதற்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
அவர்களில் சிலர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததற்காகவும் தண்டனைக்கு ஆளாகக்கூடும் என்றும் அறியப்படுகிறது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மிகக் கடுமையாகக் கையாளுவதாக காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.

